சண்முக கவசம் - விளக்கம் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளியது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1

விளக்கம்:

வானமாகியும் , மண்ணுலகமாகியும் , மனம் வாக்கு காயத்தால் அறிதற்கு இயலாத உண்மைப் பொருளாகியும் , அடியார்களுக்கு குருவாகியும் , களங்கம் இல்லாத கடவுளாகியும் , எட்டு திசைகளிலும் உள்ளவர் வணங்கிட விளங்கிய என் அருளுடைய இறைவனுமாகிய பேராற்றல் பொருந்திய சரவணப் பொய்கையில் முதற்காட்சி தந்த முருகப்பெருமான் நாள்தோறும் என் தலையைக் காப்பாராக !

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2

விளக்கம்:

ஆதிபரம்பொருளான கயிலை மலையின் திருவாளன் என் அழகிய நெற்றியைக் காப்பாராக ! மகரந்தம் பொருந்திய கடம்பு மலர் மாலையைச் சூடிய பெருமான் என் இரண்டு புருவங்களைக் காப்பாராக ! ஒளிவடிவமான தணிகை மலையில் வீற்றிருக்கின்ற பெருமான் களங்கம் உண்டாகாதபடி விழிகளை காப்பாராக ! தலைவனான கார்த்திகேயன் என் மூக்கை விருப்புடன் காப்பாராக !

இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3

விளக்கம்:

இரண்டு செவிகளையும் செவ்வேள் அவற்றின் இயல்பு குன்றாதபடி காப்பாராக ! வாயினை முருகப் பெருமான் காப்பாராக ! நாவினையும் பல்லினையும் நல்ல குமரன் காப்பாராக ! துதிக்கையையுடைய யானை முகம் வாய்ந்த கணபதிக்குத் தம்பி களங்கம் இல்லாத கன்னங்களைக் காப்பாராக ! பிடரியை ( பின் கழுத்தை ) ச் சிவ சுப்பிரமணியன் அழகுடன் விளங்கக் காப்பாராக !

ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4

விளக்கம் :

அருள் மிக்க கார்த்திக்கேயன் என் கழுத்தைக் காப்பாராக ! இலக்குமியின் மருமகன் என் ஒளியுடைய தோள்களையும் இரு விலாப்பக்கங்களையும் காப்பாராக ! பன்னிரண்டு ஆயுதங்களையுடைய இறைவன் பழுது இல்லாத என் மார்பைக் காப்பாராக ! வளரும் அழகுடைய குறிஞ்சி நிலா கடவுள் இகழ்வதற்கு இயலாத என் முழங்கையினைக் காப்பாராக !  ( வாகுலேயன்  - கார்த்திகேயன் )

உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5

விளக்கம்:

உமையம்மையாரின் இளைய மகன் என் முன்னங்கைகளை உறுதியாய் இருக்கும்படி காப்பாராக ! சிறந்த முருகப் பெருமான் என் கைகள் அஞ்சாமை மிகும்படி காப்பாராக ! வேலையுடைய முருகன் என் புறங்கைகளைக் காப்பாராக ! சிறந்து விளங்கும் திருமாலின் மருமகன் கருவியாய் அமைந்துள்ள என் பத்து விரல்களையும் காப்பாராக ! குழந்தைத் தெய்வம் என் பின்பக்க முதுகைக் காப்பாராக !

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6

விளக்கம்:

மயில் ஊர்தியை உடையவன் உணவை இட்டு நிறைக்கும் வயிற்றைக் காப்பாராக ! புதுமை மணம் கமழும் நிமிர்ந்த தோள்களை உடைய தேவரின் தலைவன் வயிற்றில் உள்ள கொப்பூழ்ச் சுழியினைக் காப்பாராக ! அக்கினி கர்ப்பன் ஆன பார்வதியின் மைந்தன் நாணிபோன்ற ஆண் குறியைக் காப்பாராக ! கந்தப்பெருமான் விரைகளின் நடுவில் பொருந்தியுள்ள நரம்பைக் காப்பாராக ! ஆறுமுகப் பெருமான் எருவாயான குதத்தை ( மலவாயை ) க் காப்பாராக !

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7

விளக்கம் :

வேலையுடைய இறைவர் தளர்ச்சி ஏற்படாதபடி எனது இடுப்பைக் காப்பாராக ! காப்பாராக ! அழகிய பிட்டங்கள் இரண்டையும் சிவபெருமானின் மகன் காப்பாராக ! காப்பாராக ! எல்லார்க்கும் மேலான மெய்ப்பொருளாக விளங்கும் கங்கையின் மகன் இரு அடித் தொடைகளைக் காப்பாராக ! சிவந்த திருவடிகளை உடைய அன்புடைய குருநாதன் முன்தொடைகளைக் காப்பாராக ! (அஞ்சகனம் -  அம் + சகனம் ; அழகிய பிட்டங்கள் )

ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8


விளக்கம் :

சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதன் என் கால்களில் உள்ள முழங்கால்கள் இரண்டையும் காப்பாராக ! திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற இறைவன் என் சிறந்த கணைக்கால் இரண்டையும் காப்பாராக ! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற முருகப்பெருமான் நேரான புறங்கால்கள் இரண்டையும் காப்பாராக !  பழமுதிர்ச்சோலை இறைவன் சிறந்த குதிக்கால்களைக் காப்பாராக !

ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9

விளக்கம் :

அழகு பொருந்திய குன்று தோறும் வீற்றிருக்கின்ற இறைவன் என் பாதங்களில் உள்ள பத்து விரல்களையும் காப்பாராக ! பசுமையுடைய பழநித் தலத்தில் வீற்றிருக்கின்ற ஆண்டவன் உள்ளங்கால்களைக் காப்பாராக ! எவருக்கும் முதல்வரான ஆறுமுகப் பெருமான் உடல் முழுமையும் காப்பாராக ! தெய்வங்களுக்கெல்லாம் தலைவனான விசாகன் நாள்தோறும் என் உள்ளத்தைக் காப்பாராக !

ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10

விளக்கம் :

பேரொலி உண்டாகும்படி பெருங் கூச்சலுடன் வரும் பூதம் , பிசாசு , பலி வாங்குகின்ற இராட்சதப் பேய் முதலிய கொடிய பலகணங்கள் எவையே யானாலும் , அவை யெல்லாம் என்னைக் கண்ட அளவில் அச்சம் கொள்ளும்படியாக , என்னை வேல் காப்பதாக ! தீயவர் செய்கின்ற சூனியம் வன்மை யுடைய மந்திர தந்திரங்கள் என்ற எவையும் என்னைத் துன்பப்படுத்தாத வண்ணம் வேல் காப்பதாகுக !

ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11

விளக்கம் :

மிக்க சினம் கொண்டு வாள் , வில் , சூலங்கள் , எடுத்திடும் தண்டாயுதம் , சக்கரம் , தடி , மழு , ஈட்டி முதலிய அழிக்கும் தன்மையுடைய கருவிகளைக்  என்மீது வீசினாலும் , அவை எனக்கு எந்த வகையிலும் துன்பம் செய்யாமல் இருக்குமாறு , முருகப் பெருமான் கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக ! (உவணி - வாள் )

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12

விளக்கம் :

பொறாமை உடையவர் , ஊனை உண்பவர் , அசட்டுக்குணமுடைய மூடர் , பேயின் தன்மை உடையவர் , அரக்கர் , அற்பர் ,  பகைவர்  ஆகியவருள் எவரானாலும் உறுதியுடன் என்னுடன் மற்போர் செய்ய கட்டிப் பிடிக்கத் தாவி வருவாராயின் , அப்போது எல்லா உலகங்களையும் காத்தருளும் , உயிர்களை வருத்தும் சூரனுக்கு இயமனைப்போன்ற எம் முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வேல் என்னைக் காப்பதாக ! (தவ்வி - தாவி , கவ்வுதல் - கவர்தல் ; பிடித்தல் )

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13

விளக்கம் :

மிக்க கொடிய நஞ்சுடைய பாம்புகள் , சிங்கங்கள் , கரடிகள் , நாய்கள் , புலிகள் , குதிரைகள் , யானைகள் , கொடுமை செய்யும் ஓநாய்கள் , குரங்குகள் , பலநிறப்
பூனைகள் , நரிகள் முதலிய இயங்கும் இயல்பு கொண்ட உயிர்கள் எதனாலும் நான் துன்பம் அடையாத வண்ணம் கூறிய வேல் விரைவாய் வந்து என்னைக் காப்பதாக ! கங்கையின் மகனான காங்கேயனின் வேல் என்னைக் காப்பதாகுக !


ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14

விளக்கம் :

முருகப்பெருமானின் திருக்கையில் உள்ள ஞானவேல் ஙகர எழுத்தை போன்ற இனம் என்று என்னை அனைத்துக் காப்பதாக ! கொடிய பறவைகள் ,   எலிகள் , தேள்கள் , நண்டு காலிகள் , வன்மையுடைய செய்யான்கள் , நச்சுப் பல்லிகள் , நகத்தையுடைய ஓணான்கள் , பூரான்கள் , வண்டுகள் , சிலந்திகள் என்ற இவற்றால் இந்த உலகத்தில் எனக்கு இடையூறு ஏற்படாதபடி இறைவனின் கை அழகிய வேல் காப்பதாக ! (புலியின் பூச்சி - சிலந்தி )

சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15

விளக்கம் :

நீரிலே வாழும் வன்மைவாய்ந்த முதலை , நீண்ட கொம்பையுடைய திருக்கைமீன் , மற்றுமுள்ள நீர்வாழ் உயிர்கள் , நிலத்திலும் , நீரிலும் பெரிய துன்பத்தைத் தருவதற்கே பிறந்துள்ள மற்ற உயிர்கள் ஆகியவற்றால் நான் துன்பம் அடையாத வண்ணம் , அவ்வக் காலங்களில் , உறுதியுடன் இருந்து வேல் காப்பதாக ! தீப்பொறிகளின் மூலம் அமையப் பெற்ற உடலை உடைய முருகப்பெருமானின் கூறியவேல் காப்பதாக ! (பாவகி - அக்கினி )

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16

விளக்கம் :

முருகபப்பெருமானின் அழகிய திருக்கை வேல் ஒன்பது கிரகங்களால் உண்டாகும் துன்பத்திலிருந்து என்னைக் காப்பதாக ! பூப்போன்ற கண்களினின்று உண்டாகும் நோய்கள் , பல்குத்தல் நோய் , மூக்கு நோய்கள் , திமிர் நோய் , வாதக் கால்நோய் , இரத்த சோகை நோய் , தலைவலி , தலைக்கு அடியில் உள்ள காது நோய் முதலியவை என்னை நெருங்கித் துன்புறுத்தாத வண்ணம் பன்னிரண்டு தோள்களையுடைய முருகப்பெருமானின் வெற்றி வாய்ந்த வேல் காப்பதாக ! (அம்பரியன் - ஊர்தியுடையவன் , சுமவிழி - மலர் போன்ற கண் )

டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17

விளக்கம் :

உடுக்கையின் அடிபோல் துன்பப்படுத்தும் தலையிடி , கண்டமாலை , குமுறி மிக்க வலி உண்டாக்கும் சிலந்திப்புண் , வயிற்றுவலி , குடல் நோய் , கபநோய் , காசநோய் , நிமிர முடியாத வண்ணம் படுக்கையில் வருத்தும் வெப்பு நோய் , நீர் கோத்த மேக நோய்கள் என்னும் இவை எல்லாம் என்னை அடையாதவண்ணம் கிரவுஞ்ச மலையைப் பிளந்த முருகப்பெருமானின் கைவேல் காத்தருளுக . 

இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18

விளக்கம் :

கட்டுப்பாடின்றிப் பெருகும் பித்த எரிச்சல் , பெரிய சுர நோய்கள் , கைகால்கள் , முடங்கும் படி செய்யும் தொழுநோய் , வெண்மையான மூலமுளை , பசியின்மை , கணப்போதில் இறப்பை ஏற்படுத்தும் சன்னிவகைகள் என்று சொல்லப்படும் இந்த நோய்க் கூட்டம் என்னை அடிப்படுத்தி ஆளாதபடி பெருஞ்சத்தி வேல் காப்பதாக .

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19

விளக்கம் :

நாவரட்சியை உண்டாக்கும் நோய் , வாத நோய் , சீதள நோய் , உணவில் வெறுப்பு , உடலை வற்றிடச் செய்கின்ற மூலச்சூடு , இளைப்பு , வருத்தும் விக்கல் நோய் , துன்பப்படுத்தும்  பேதி , சீழ் உண்டாக்கும் நோய் , வாதத்தால் உண்டாகும் பீஜ நோய்கள் , சூலை நோய் ஆகிய எவையும் என்னிடம் வராமல் எம்பெருமானின் திண்மையான வேல் என்னைக் காப்பதாக .

நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20

விளக்கம் :

நமைச்சல் உண்டாக்கும் கிரந்தி நோய் , உடலில் வீக்கத்தை விளைவிக்கும் பாண்டு நோய் , சோர்வை உண்டாக்கும் கருமை வெண்மை நிறமாக வரும் பலவிதமான தொழுநோய்கள் , வாந்தி , இமைப்பதற்கு முன் உண்டாகும் இழுப்பு நோயுடன் விம்மிக் குத்தி வலியை ஏற்படுத்தும் பவுத்திரம் முதலிய நோய்கள் ஆகியவை இமைப்பொழுதும் என்னை வந்து தாக்காத வண்ணம் இறைவரின் அருள்வேல் காப்பதாகுக.  (பகந்தராதி - பவுத்திர நோய் முதலியன )

பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21

விளக்கம் :

சினந்து பற்களைக் கடித்து மீசையானது படபட என்றே துடிக்கக் கல்லைக் காட்டிலும் வன்மை உடைய மனத்தைக் காட்டிக் கண்களை உருட்டிப் பார்த்து , இருளைவிட மிகவும் கரிய மேனியுடைய இயமதூதர் என்னிடம் வந்தாலும் , விரைவில் தாரகாசுரனை வென்ற இறைவனின் ஓம் ஐம் ரீம் என்ற மூன்று இயல்புடைய வேல் காப்பதாக ! (ஓம் - காப்பு , ஐம் - தலைமை , ரீம் - உக்கிரம் )

மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22

விளக்கம் :

தரையிலும் , மரத்தின்மேலும் , மலையிலும் , தீயின் மீதும் , குளிர்ச்சி மிக்க நீரிலும் , எறிச் செலுத்தும் ஊர்திகளிலும் , வானத்திலும் , பாதளக் குகைகளிலும் , பிற எந்த இடத்திலும் , என்னை நெருங்கி வந்து அருள் நிறைந்த சஷ்டிநாதன் திருக்கை வேலானது காப்பதாக ! காப்பதாக !

யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23

விளக்கம் :

'ய' என்ற எழுத்தைப்போல் விளங்கும் மூன்று தலையுடைய சூலத்தை ஏந்தும் மணம் வீசும் திருபுயங்களைக் கொண்ட முருகப்பெருமானின் திருக்கைவேல் என் முன்பக்கத்தில் காப்பதாக ! 'அ' என்னும் எழுத்தை முதலாகக் கொண்ட உயிர் எழுத்துக்கள் போல் பன்னிரண்டு கண்ணுடைய பரமனின் வேல் என் பின்பக்கத்திலிருந்து காப்பதாக !  'ச' என்ற எழுத்துடன் கூடி ஆறு எழுத்தையும் தன் பெயராய்க்  கொண்ட பெருமானின் கைவேல் என் நடுப்பக்கத்தைக் காப்பதாக . சிகரம் போல் விளங்கும் தெய்வ முடியைப் பூண்ட இறைவரின் விளங்கும் தலைமையுடைய வேல் என்னை மேலும் கீழும் காப்பதாக !

ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24

விளக்கம் :

இனிய சொல்லைப் பேசும் தேவயானையின் கணவனாரும் வள்ளியின் கணவனாருமான முருகப்பெருமானின் செம்மையான வெற்றி வேல் கிழக்குத் திக்கில் ஆவலுடன் இருந்து காப்பதாக ! அக்கினியின் ஆட்சி மிகுந்த தென்கிழக்குத் திசையில் ஞானவீரன் வேல் காப்பதாக . குறைவில்லாத கதிர்காமத்தில் வீற்றிருப்பவனின் பகைவரை அழிக்கும் வேல் தென்திசையிலே இருந்து என்னைக் காப்பதாக .

லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25

விளக்கம் :

'ல' என்ற எழுத்தின் வடிவைப்போல் வளைந்து ஆரவாரம் செய்த காளிங்கன் என்ற பெரிய பாம்பின் நல்ல உடலானது நெளியுமாறு அதன் மேல் நின்று அதன் வன்மை அழியுமாறு நடனமாடிக் குடைந்த சக்கரத்தை உடைய திருமாலின் மருமகன் கையில் உள்ள வேல் , வழிபாடு செய்து கொண்டிருக்கும் என்னைத் தென்மேற்குத் திசையில் இருந்து காப்பதாக ! போர் வேல் மேற்குத் திசையில் என்னைக் காப்பதாக ! வாயுவின் திசையான வடமேற்குத் திசையில் இடையூறு ஏற்படாத வண்ணம் குகப்பெருமானின் திருக்கைவேல் காப்பதாக !

வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26

விளக்கம் :

வடக்கில் சிவபெருமானின் மைந்தனின் அருள்வடிவான செல்வ வேல் காப்பதாக . காளை ஊர்தியுடைய சிவபெருமானின் வடகீழ்த் திசையில் பிரணவ மந்திரப் பொருளை தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் வேல் காக்க . நடக்கின்ற போதும் , அமர்ந்து இருக்கும்போதும் , பேசும்போதும் , குனிந்து நிமிரும்போதும் , தரையில் படுத்திருக்கும்போதும் உறங்கும்போதும் கிரவுஞ்ச மலையைத் துளைத்த முருகப்பெருமானின் வேல் காப்பதாக . 

இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27

விளக்கம் :

இழந்துபோகாத பேரின்பப் பெருவாழ்வை அருளுகின்ற முத்தையனின் திருக்கை வேல், உதவும் நல்ல உணவை நான் உண்ணும் போதும் , விருப்பத்துக்குரிய  விளையாட்டை விளையாடும்போதும் , பழைய தேவர்கள் வணங்கும் திருவடிகளைத் தொழுது உள்ளத்தை ஒன்றுபடுத்திக் கொணரும்போதும் அருட்குணத்துடன் இருந்து காப்பதாக ! உறுதியுடன் இருந்து அம்முத்தையனார் மயிலும் உதவுவதாக !

இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28

விளக்கம் :

பாலப்பருவத்திலும் வாலிபப்பருவத்திலும் நரை முதலியவை முதிர்ந்து வரும் முதுமைப் பருவத்திலும் அருள் வளரும் ஆறுமுகமுடைய சிவனார் என் முன்பு எழுந்தருளி என்றும் காப்பாராக  ! கதிரவன் தோன்றும் காலையிலும் முற்பகலிலும் ஓம் என்பதன் பொருளான சிவசுவாமி காப்பாராக  . தெளிந்த நடுப்பகல், பிற்பகல் முதலிய காலங்களில் சிவகுருநாதன் காப்பாராக  !

இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29

விளக்கம் :

இறகையுடைய சேவலுக்கும் மயிலுக்கும் தலைவன் முருகப்பெருமான் என்னை முன் இரவில் காப்பாராக  ! ஆற்றல் உடைய சூரபன் மனின் பகைவனான பெருமான் விளங்கும் பின் இரவில் காப்பாராக  ! தேன் பொருந்திய தாமரை போன்ற திருவடியை உடைய சிலம்பணிந்த இறைவன் நள்ளிரவில் என்னைக் காப்பாராக  ! வேதங்கள் துதிக்கும்படியான இளையவனான முருகன் மாற்றம் ஏதும் உண்டாகாத வண்ணம் எக்காலத்துக்கும் காப்பாராக  ! காப்பாராக  !

இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30

விளக்கம் :

'நீ கூடி வாழத்தக்க இனம்' என அடியவருடன் என்னை கூட்டி வைக்கும் செட்டியான முருகன் என்னை காப்பாராக  ! நான் தனிமையில் இருக்கும்போதும் கூட்டத்தில் இருக்கும்போதும் சரவணபவன் என்னைக் காப்பாராக  ! சிறந்த கந்தர் அநுபூதி என்ற நூலைப் பாடியருளிய அருணகிரி நாதரை ஆட்கொண்ட முருகன் காப்பாராக  ! இந்தச் 'சண்முக கவசம்' என்ற நூலை மகிழ்வுடன் பாடிய 'குமரகுருதாசன்'  என்ற என்னுடைய இறைவனான ஆறுமுகப்பெருமான் அருளுடன் வந்து என்னைக் காப்பாராக  !

திருச்சிற்றம்பலம்

3 comments: